குண்டம் இறங்கி பக்தர்கள் பரவசம்
ADDED :1712 days ago
அன்னூர்: கஞ்சப்பள்ளி, அம்மன் கோவிலில், பக்தர்கள் பக்தி பரவசத்துடன், அக்னி குண்டத்தில் இறங்கி வழிபட்டனர். கஞ்சப்பள்ளி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த 10ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பரிவார தேவதைகளுக்கு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 11ம் தேதி கன்னிமார் பூஜை, சுமங்கலி பூஜை, செண்டை மேளம் முழங்க, அம்மன் திருவீதி உலா, திருக்கல்யாணம், நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு, அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அக்னி குண்டத்தில் இறங்கி, அம்மனை வழிபட்டனர். சிறப்பு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து குலதெய்வத்தினரும், ஊர் பொதுமக்களும் பங்கேற்றனர்.