உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா விமரிசை

மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா விமரிசை

சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா, நேற்று விமரிசையாக நடந்தது.

சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி மாதப் பெருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் அதிகார நந்தி சேவையும், ஏழாம் நாள் தேர்த் திருவிழாவும் நடந்தது.விழாவின் பிரதான நாளான நேற்று, அறுபத்து மூவர் திருவிழா நடந்தது. நேற்று காலை, திருஞான சம்பந்தர் எழுந்தருளல், என்பை பூம்பாவையாக்கி அருளல் நிகழ்ச்சி நடந்தது.மாலை, 2:45 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய கபாலீஸ்வரர், கோபுர தரிசனம் கொடுத்து, அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் காட்சியளித்தார்.

பின், வெள்ளித் தேரில் கபாலீஸ்வரர் முன் செல்ல, அறுபத்து மூன்று நாயன்மார்களும் பின் தொடர்ந்தனர். இதில், மயிலாப்பூரைச் சேர்ந்த பிரதான கோவில்களின் உற்சவ மூர்த்திகளும் பங்கேற்றனர். இரவு, சந்திரசேகரர் பார்வை வேட்டை விழாவும், ஐந்திரு மேனிகள் விழாவும் நடந்தது.அன்னதானத்திற்கு தடைஅறுபத்து மூவர் விழாவில், ஆண்டுதோறும் போலீசாரிடம் அனுமதி பெற்று, பக்தர்கள் அன்னதானம் வழங்குவர்.ஆனால், இம்முறை கொரோனா தொற்று காரணமாக அன்னதானத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !