பங்குனி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி கடலில் பக்தர்கள் நீராடினர்
ADDED :1642 days ago
ராமேஸ்வரம்: பங்குனி அமாவாசைக்கு ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
நேற்று பங்குனி அமாவாசை யொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி பூஜை செய்து கடலில் சிவ சிவ என கோஷமிட்டபடி புனித நீராடினார்கள். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினார்கள். பின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பயபக்தியுடன் நின்று தரிசனம் செய்தனர்.