சிதிலமடைந்த அய்யனார் கோவிலை புனரமைக்க கோரிக்கை
பெண்ணாடம் : ஓ.கீரனுாரில் சிதிலமடைந்துள்ள அய்யனார் கோவிலை புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த பெ.பூவனுார் ஊராட்சி, ஓ.கீரனுாரில் நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அய்யனார் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை மாதங்களில் ஊரணி பொங்கல் உள்ளிட்ட திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும்.இக்கோவிலுக்கு ஓ.கீரனுார், பூவனுார், கோனுார், தாழநல்லுார் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கோவில் பராமரிப்பின்றி சுவர்களில் விரிசல் விழுந்து, கோபுரம், மேல்தளத்தில் செடிகள் மண்டியதால் கற்கள் சரிந்து, இடிந்து விழுகின்றன.இதனால், கோவிலுக்குள் சென்று பூஜை செய்ய பூசாரிகள் அச்சம் அடைகின்றனர். எனவே, சிதிலமடைந்த கோவிலை புனரமைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.