உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ம சாஸ்திரங்கள் கூறும் பெண்களுக்கான குறிப்புகள்!

தர்ம சாஸ்திரங்கள் கூறும் பெண்களுக்கான குறிப்புகள்!

1. மெட்டி, காதணி, மூக்குத்தி, மாங்கல்யசூத்ரம் ஆகியவை கணவனின் ஆயுளை அதிகரிக்கும் மங்கள வஸ்துக்கள் என்பதால், பெண்கள் அவற்றை என்றுமே களையக்கூடாது.

2. பெண்கள் குளித்த பிறகே சமைக்க வேண்டும்.
சமையல் செய்யும்பொழுது உண்டாகும் வியர்வையைக் காரணம்காட்டி, சமைத்தபிறகு குளிப்பது தகாத செயலாகும்.

3. பெண்கள் தலைமுடியை விரித்துப் போட்டுக்கொண்டு கோலம் இடுவது, விளக்கேற்றுவது, பூஜை செய்வது, கோயிலுக்குச் செல்வது, ஆன்மீக உபன்யாசங்களுக்குச் செல்வது, திருமணம் போன்ற புனித நிகழ்ச்சிகளுக்குச் செல்வது, மதகுருமார்களிடம் ஆசிவாங்கச் செல்வது இவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

4. பெண்கள் தலையை முடிந்து கொண்டே உணவைப் பரிமாற வேண்டும்.

5. பத்து நாட்கள் இறப்பு தீட்டு காத்த பெண்களை, ஆறுமாத காலத்திற்கு சுமங்கலி ப்ரார்த்தனைக்கு அழைக்கக்கூடாது.

6. விளையாட்டுக்குக்கூட, கணவனை ஒருமையில் அழைக்கக்கூடாது. அது கணவரது ஆயுளைக் குறைக்கும் என்பதால், அது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

7. திருமணமான பெண்கள் வகிடு உச்சியில் குங்குமம் இல்லாமலும், காலின் இரண்டாவது விரலில் மெட்டி அணியாமலும் இருக்கவே கூடாது.

8. கருத்தரித்து இருக்கின்ற பெண்கள், ஊசியைப் பயன்படுத்தி, துணிகளைத் தைக்கக் கூடாது. அவ்வாறு செய்வது, வளர்கின்ற சிசுவைப் பாதிக்கும்.

9. கருத்தரித்து நான்கு மாதம் ஆன பெண்கள், தங்களது நகத்தை, தாங்களே வெட்டிக்கொள்ளக்கூடாது.

10.பூஜை செய்வது, புராணங்கள் வாசிப்பது போன்றவற்றை, கணவனின் அனுமதியில்லாமல் பெண்கள் செய்யக்கூடாது.
அதுவுமன்றி, அந்த நேரங்களில் கருப்புநிற ஆடைகளை அணியவும்கூடாது.

11.முந்தானையைச் செருகிக்கொண்டே, பெண்கள் கோயிலில் இறைதரிசனம் செய்ய வேண்டும்.

12.நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டு காசி, ராமேஸ்வரம், நவப்ருந்தாவனம் போன்ற புனிதஇடங்களுக்கு யாத்திரைகள் செல்லக்கூடாது. அப்படிச்செல்வது முழுபலனைப் பெற்றுத் தராது.

13.வீடுகளில் கர்ப்பிணிப் பெண்கள் இருந்தால், காசி, ராமேஸ்வர யாத்ரிரைகள் செல்வதும், எள்ளைக் கொண்டு செய்கின்ற (திலஹோமம்) ஹோமங்களும் செய்யக்கூடாது.

14.கரிநாளன்று தொலைதூரப் பயணத்தை மேற்கொள்ளக்கூடாது.

15.வெளியில் கிளம்பும்போது தெற்கு திசையில் முதலில் நகராமல், சில அடிகள் வடக்குநோக்கி வைத்துவிட்டு, பிறகு தொடர வேண்டும்.
அப்படிச் செய்வது, நாம் மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றியையும், வளத்தையும் கொடுக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !