திருப்பதி பிரமோற்சவம்: சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை, சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். திருமலையில் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி சேவை சாதித்தார்.நவராத்திரியின் அம்சத்தை பின்பற்றி பிரம்மோற்சவத்தின் வாகனச் சேவைகள் அமைந்துள்ளன. முதல் இரண்டு நாட்கள் ஊர்வன, பறப்பன வாகனங்களில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, மூன்றாம் நாள் காலை, காட்டிற்கு ராஜாவான மிருக அம்சமுடைய சிம்ம வாகனத்தில் வலம் வந்தார். மாலையில், முத்துபந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் எழுந்தருளினார். வாகனச் சேவையின்போது மங்கல வாத்தியங்கள், வேத கோஷம், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.