உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை அருகே பாண்டியர் கால தமிழ் கல்வெட் டு கண்டுபிடிப்பு

மதுரை அருகே பாண்டியர் கால தமிழ் கல்வெட் டு கண்டுபிடிப்பு

பேரையூர் : மதுரை மாவட்டம் வில்லுார் அருகே போத்தநதி ஊரில் கி.பி. 13ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியர் கால தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்றத் தலைவர் விநாயகமூர்த்தி தகவல்படி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில் ஆனந்தகுமரன், கருப்பசாமி ஆகியோரின் கள ஆய்வில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டும், சிதைந்த நிலையில் சிவன் கோயிலும் கண்டறியப்பட்டுள்ளன.

முனீஸ்வரன் கூறியதாவது: செங்குடிநாடு பகுதியில் மதவேல நாயக்கனூரின் கட்டுப்பாட்டில் கௌசீக நதிக்கரையின் மேற்கு பகுதியில் போத்தன் என்ற சிற்றரசர் ஆட்சி புரிந்ததாகவும் அவர் பெயரில் போத்தநதி என்ற ஊர் பெயர் வந்ததாகவும் அறியப்படுகிறது. இவ்வூரின் தெற்கு பகுதியில் போத்தன் ஊரணியின் அருகே பாழடைந்த நிலையில் கருவறை, கோபுரம், முன் மண்டபம் கொண்ட கோயில் உள்ளது. செங்கற்கள் சாந்து சேர்ந்து கட்டிய கோபுரம் முற்றிலும் சிதிலமடைந்து சிற்பங்கள் சிதைந்த நிலையில் இருக்கின்றன.

கருவறை சதுர வடிவத்தில் கிழக்கு நோக்கியும், உட்பகுதி வடக்கு, தெற்கு திசையில் மாடக்குழிகளும் சிலைகள் இன்றி அமைந்துள்ளன. முன்மண்டபம் முற்றிலும் சிதிலமடைந்ததால் மிஞ்சிய தூண்களில் வாயிற் காவலர்கள் ஆண், பெண் சிற்பங்களாக நின்று வணங்கிய நிலையிலும், பூ மொட்டு போதிகையுடன் தூணின் இரண்டு பக்கமும் செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் பாத பந்த அதிட்டானம் குமுத வரி பகுதியில் 3 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட 8 வரி சொற்கள் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பல சொற்கள் தேய்மானம் ஏற்பட்டதால் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உதவியுடன் மை படியெடுத்து ஆய்வு செய்த போது திருவாய்க்கேழ்விக்கு மேல் ஸ்ரீ கோமாற பன்மரன் திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு மாடக்குழக்கு மதுரை திருவாலவாயுடையார் கோவில் என்ற வரிகள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சி காலத்தைச் ( 1216- - 39) சேர்ந்தவையாகும். திருவாலவாயுடையர் என்று அழைக்கக்கூடிய சிவன் கோயிலுக்கு சந்தியா தீபம் ஏற்றிட நிலம் தானமாக வழங்கப்பட்டு இருக்கலாம். கல்வெட்டின் காலம் கி. பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !