ஐயப்ப சுவாமி ஊர்வலம் சூலூரில் பக்தர்கள் பரவசம்
ADDED :1350 days ago
சூலூர்: காங்கயம்பாளையத்தில் நடந்த ஐயப்ப சுவாமி ஊர்வலத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சூலூர் அடுத்த காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, கடந்த, நவ., 11 ம்தேதி மண்டல மகர விளக்கு திருவிழா துவங்கியது. கடந்த, டிச., 12 ம்தேதி அகண்ட நாம ஜபம் மற்றும் அன்னதானம் நடந்தது. நேற்று முன்தினம், மாலை, 4:30 மணிக்கு, காங்கயம் பாளையம் பெருமாள் கோவிலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், ஐயப்ப சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், ஐயப்பன் கோவிலில் நிறைவடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஊர்வலத்தில், ஜெண்டை வாத்தியங்கள் முழங்க, ஏராளமான பெண்கள், சிறுமிகள், கைகளில் விளக்கு ஏந்தி, வந்தனர். தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில் குடும்பத்துடன் பக்தர்கள் பங்கேற்றனர்.