உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் யானை ஆய்வு :சிறப்புக் கமிட்டியினரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் யானை ஆய்வு :சிறப்புக் கமிட்டியினரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் யானை ஆய்வு- . சிறப்புக் கமிட்டியினரை பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.

தமிழகத்தில் உள்ள கோவில் மற்றும் தனியார் வளர்ப்பு யானைகள், தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்புச் சட்டம் 2011-இன்படி பராமரிக்கப்பட வேண்டும். ஆனால்  மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை, திருச்சி மலைக்கோட்டை யானை லட்சுமி, திருப்பரங்குன்றம் கோவில் யானை  தெய்வயானை, குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி ஆகிய நான்கு யானைகள் 2011 சட்ட விதிகளின்படி பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசின் வனத்துறை சார்பில் சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டு, இந்த நான்கு யானைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழக வனத்துறையின் சிறப்புக் கமிட்டி புது டெல்லி வைல்ட் லைஃப் டிரஸ்ட் ஆப் இந்தியா துணைத் தலைவர் டாக்டர் அஷ்ரப் தலைமையில் விலங்குகள் நல ஆர்வலர்கள் சென்னை ஆண்டனி, ரமேஷ் மற்றும் யானைகள் ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவகணேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் கோவில் யானை அபயாம்பிகையை பார்வையிட்டு, பராமரிப்புகள் குறித்து ஆய்வு செய்ததுடன், உயரம் நடக்கும் விதம், பாதத்தில் தன்மை ஆகியவற்றை பரிசோதித்தனர். மேலும் அக்குழுவினர் யானைக்கு வழங்கப்படும் உணவு, மருத்துவம் உள்ளிட்டவைகள் குறித்து பாகனிடம் கேட்டறிந்ததுடன், யானைக்கான ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இந்த குழுவினர் அனைத்து யானைகளையும் ஆய்வு செய்த பின்னர் இதுகுறித்த அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளனர். ஆய்வுக் குழுவினர் தங்களது ஆய்வை முடித்து விட்டு புறப்பட தயாராக இருந்த நிலையில் அங்கு வந்த மயிலாடுதுறை நகர பாஜக தலைவர் மோடி கண்ணன் தலைமையிலான பாஜக, இந்து முன்னணி ஆகியவற்றின் நிர்வாகிகள் ஆய்வுக்குழுவினரை தடுத்து நிறுத்தியதுடன், அவர்கள் அங்கிருந்து செல்ல முடியாதபடி கோவில் வாயிலை மூடியும், வனத்துறை வாகனம் முன்பு மறியலில் ஈடுபடும் அரசால் நியமிக்கப்பட்ட குழு என்பதற்கான  ஆணையை காண்பிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், குழுவினர் வசம் இருந்த அரசு ஆணையை  காண்பித்த பின்னர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து ஆய்வுக்குழுவினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !