பிரம்மோற்சவம்: காளஹஸ்தியில் சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி
சித்தூர்: காளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாவது நாளான நேற்று (26ம் தேதி) காலை சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும் சப்பரத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர் ,முருகர், சண்டிகேஸ்வரர் , ஸ்ரீ காளத்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார் உட்பட பக்த கண்ணப்பர் (உற்சவ மூர்த்திகளுக்கு) சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் மங்கல வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக ராஜகோபுரம் வரை வந்தபின்னர்.அங்கு சிறப்பு பூஜைகள் செய்ததோடு மகா தீபாராதனை கொடுக்கப்பட்டு சன்னதி வீதி ,நேரு வீதி ,நகரி வீதி வழியாக பஜார் தெரு வழியாக நான்கு மாட வீதிகளில் சாமி அம்மையார்களின் வீதிஉலா நடைபெற்றது . வீதி உலாவின் போது ஏராளமான பக்தர்கள் கற்பூர நீராஜனம் சமர்ப்பித்த தோடு சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். இதேபோல் இரவு 10 மணிக்கு பூத வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாடவீதிகளில் வீதி உலா அருள்பாலித்தனர்.