உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்திரகாளியம்மன் கோயில் மகா சிவராத்திரி விழாவில் அற்புதம்

பத்திரகாளியம்மன் கோயில் மகா சிவராத்திரி விழாவில் அற்புதம்

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் முதலியார்பட்டிதெரு பத்திரகாளி அம்மன் கோயிலில் நடந்த மகா சிவராத்திரி வழிபாட்டில், கொதிக்கும் நெய்யில் 89 வயது மூதாட்டி முத்தம்மாள் கையால் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைத்தார்.

இக்கோயிலில் மகாசிவராத்திரியன்று இரவு கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்காக பிரசாதமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. சிவராத்திரியான நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் வழிபாடு துவங்கியது. மூதாட்டி முத்தம்மாள் அடுப்பில் கொதித்த எண்ணையை எடுத்து தன் நெற்றியிலும், கோயில் பூசாரிகள், பக்தர்களுக்கு திருநீருடன் கலந்து பூசினார். இதன் பின் அம்மனை வணங்கி விறகு அடுப்பில் நெய் கொதித்த நிலையில், கருப்பட்டி, அரிசி மாவு கலந்த அப்ப உருண்டையை மிதக்கவிட்டு கையால் எடுத்து பனை ஓலைப் பெட்டியில் சேகரித்தார். அவருக்கு உதவியாக கோயில் பூசாரிகள் இருந்தனர். நேற்று அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரத்தில் அம்மனுக்கு அப்பங்கள் படைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பிரசாதமாக அப்பங்கள் வழங்கப்பட்டது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி மதுரை, தேனி, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !