உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகின் மிகப் பெரிய திருவாரூர் ஆழி தேரோட்டம்: ஆரூரா, தியாகேசா கோஷத்துடன் கோலாகலம்

உலகின் மிகப் பெரிய திருவாரூர் ஆழி தேரோட்டம்: ஆரூரா, தியாகேசா கோஷத்துடன் கோலாகலம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் ஆழித்தேரோட்டம், ‘ஆருரா ... தியாகேசா’ கோஷங்கள் முழங்க கோலாகலமாக நடந்தது.

 திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் வரலாற்று சிறப்புமிக்கது; மிகவும் பழமை வாய்ந்தது. ‘ இக்கோவில் தோன்றிய காலத்தை கூறமுடியாத அளவு பெருமை பெற்றது’ என, திருநாவுக்கரசர் பாடியுள்ளார். இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது ஆழித்தேர். இத்தேர், உலகிலேயே மிகப்பெரியது.தேரின் உயரம் 96 அடி; எடை 350 டன். முன்புறம் தேரை இழுப்பதுபோல் நான்கு குதிரை சிலைகள் உள்ளன. ஒவ்வொரு குதிரையும்,26 அடி நீளம், 11 அடி உயரம் உடையவை. இவை, தமிழர்களின் கலைநயத்தை பறைசாற்றும் விதமாகவும், நான்கு வேதங்களை குறிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளன. தேரை இழுக்கும் வடத்தின் நீளம், 425 அடி, சுற்றளவு, 21 அங்குலம். திருச்சி, ‘பெல்’ நிறுவனம் ஆழித்தேரை நவீனமாக்கி, ‘ைஹட்ராலிக் பிரேக்’அமைத்துள்ளது. நடப்பு ஆண்டு, இக்கோவிலில், கடந்த மாதம், 18ம் தேதி பங்குனி உத்திரவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆழித்தேரோட்டம். ஐதீகப்படி, கடந்த,1990; 1991; 2021ம் ஆண்டுகளில், ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடந்தது. நடப்பு ஆண்டு தேரோட்டத்தை ஒட்டி, கடந்த 14ம்தேதி இரவு, 11:00 மணிக்கு, ஆழித்தேருக்கு தியாகராஜசுவாமி எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 5:15 மணிக்கு,விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது. நேற்று, ஆயில்ய நட்சத்திரத்தில், காலை 8:15 மணிக்கு, அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் வடம்பிடித்து, ஆழித்தேரோட்டத்தை துவக்கிவைத்தனர். உடன் கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன், எம்.எல்.ஏ., பூண்டிகலைவாணன் இருந்தனர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘ஆரூரா... தியாகேசா’ கோஷங்கள் முழங்க வடம்பிடித்து தேரை இழுத்தனர். ஆடி அசைந்து புறப்பட்ட ஆழித்தேர், பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆழித்தேருக்குபின், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் இழுக்கப்பட்டன. கீழ ரதவீதியில் கிளம்பிய ஆழித்தேர், இரவு நிலையை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !