நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் தேரோட்டம்
தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் பங்குனித் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
108 திவ்யதேசங்களில் 20வது திவ்யதேசமாகவும், சோழநாட்டு திருப்பதிகள் 40ல் 14வது திருப்பதியாகவும் போற்றப்படுகிறது. இங்கு மூலவராகவும் உற்சவராகவும் விளங்கும் கல்கருடபகவான் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் உற்சவராக வீதியுலா வருவது பிரசித்திபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு கடந்த 10ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதியுலா நடைபெறுகிறது. கடந்த 13ம் தேதி நான்காம் நாள் விழாவன்று உலகபிரசித்திபெற்ற கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 9-ம் நாள் விழாவா நேற்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுத்தனர்.