பிரம்மனும் திருமாலும் காணாத அடிமுடியை நால்வரும் எவ்வாறு கண்டனர்
சித்தர் இலக்கிய ஆய்வாளர் பா.கமலக்கண்ணன்
படைக்கும் தெய்வமான பிரம்மனும், காக்கும் தெய்வமான திருமாலும் தேடிக் காணாத அடிமுடி எது? அது எங்கே உள்ளது? இரு தெய்வங்களும் காண முடியாததை சித்தர்களும், நால்வரும் எவ்வாறு கண்டனர்.
இதற்கு அகத்தியர் விடையளிக்கிறார்:
ஆதியிலே ஆதிதனை அறிந்தே னப்பா
அரகரா பிரம்மரிஷிக் கூட்ட மாச்சு
சோதியெனும் மாலயனும் காணா நாதன்
சுருதியுள்ள விசுவனுக்குச் சொன்னார் சூட்சம்
நீதியிலே போதகிரி தன்னில் சென்று
நினைவது தான் தவறாமல் மனவுறுதியாக
பாதி மதி அணியுமரன் தேவி பாதம்
பதம் பிடித்து மனதறிவில் அமர்த்தினேனே.
– அகத்தியர் அமுதகலை ஞானம்
இதன் பொருள்: நான் முன்பே நடராஜர் என் உயிராக தலையில் உள்ள பிரம்மரந்திரத்தை அறிந்து பிரம்ம ரிஷிகள் கூட்டத்தில் சேர்ந்தேன். பிரம்மனும், திருமாலும் காணாத சிவலிங்க வடிவத்தை பற்றிய எல்லா ரகசியங்களையும் பிரம்ம ரிஷிகள் என் சூக்கும சரீரத்திற்குக் கூறினர். நான் பிரம்மரந்திரத்திற்குள் நுழைந்து நினைவு தவறாமல் உறுதியாகத் தவம் செய்தேன். நடராஜர், உமாதேவியின் திருவடிகளை என்னில் நிலையாய் நிறுத்தினேன்.
அகத்தியர் தொடர்ந்து ஞான தீட்சாவிதி பாடலில் கூறுகிறார்.
மூல முதல் ஆதார பீட மாகி
முச்சுடராம் உச்சிவெளி தன்னில் ஏறி
மாலயனும் அறியாத பாதம் தன்னை
மகேந்திர கிரி சார்பு தனில் கண்டு தேறி
என்னுடைய துால உடலுக்கு ஆதார பீடமான பிரம்மரந்திரத்தினுள்ளே சுழுமுனை சுவாசத்தால் ஏறி, மகேந்திரகிரி என்னும் விஞ்ஞான மயகோசத்தில் (துரியாதீதத்தில்) திருமாலும், பிரம்மனும் காணாத அடி முடியை கண்டேன்.
அகத்திய முனிவரின் இவ்விரு பாடல்களில் இருந்தும், நம் சிரசில் உள்ள பிரம்மரந்திரம் என்னும் நுண்ணிய துவாரத்தின் உள்ளே – உச்சிக்குழியின் கீழே சிவலிங்க வடிவ சோதியும் நடுவில் சுடருமாக விளங்கும் உயிரே இறைவனின் அடிமுடி என்று தெளிவாக அறிகிறோம்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் வசிட்டர் ராமனுக்குக் கூறிய விளக்கமாவது:
புருவ நாப்பணே கண்மணிப் பார்வைதான்
பொருவில் சாந்தியின் மாய்ந்து
தெருளும் கேதன அறிவாங்கு தெறிவறில்
திரிவுறாது உயிர் நிற்கும்
கருது கின்ற இந்நெறிகளால் அநேக
சங்கற்ப கற்பித பேதத்து
அருள் செயும் பல தேசிகர் சொற்களால்
அசைவற உயிர் நிற்கும்.
புருவங்களின் நேர்நடுவில் கண்மணிப்பார்வை அமையத் தவம் செய்தால், உயிரின் குற்றமற்ற தயவால், மும்மலங்களும் மாய்ந்து சூக்கும சரீரம் தெளிவு பெற்று நிற்கும். முத்தி நிலையை கருதுகின்ற இந்த தவத்தால் பற்பல ரகசியங்களை உபதேசிக்கும் குருவின் அருளால், சிவலிங்க சோதிவடிவான உயிர், அசையாது கண்முன் தோன்றி நிற்கும்.
காக புஜண்டர் என்ற சித்தர் தாம் உயிராகிய கடவுளைக் காண்பதற்காக இருபத்திரண்டு ஆண்டுகள் காத்திருந்ததாக இப்பாடலில் கூறுகிறார்.
தேறினேன் இரண்டுபத்து இரண்டு ஆண்டு
தெய்வத்தை நான் சேரக் காத்திருந்தேன்.
காகபுஜண்டர் பெருநுால் காவியம்
இந்த சான்றுகளில் இருந்து நம்முடைய சிரசில் உச்சிக்குக் கீழே பிரம்மரந்திரம் என்னும் நுண்ணிய துவாரத்தின்னுள்ளே விஞ்ஞானமய கோசம் என்னும் துரியாதீதத்தில் விளங்கும் உயிராகிய பரப்பிரம்மத்தை நினைந்து கடும் தவம் செய்தால் அடிமுடியாகிய சிவலிங்க சோதி கண்முன் வந்து நிற்கும் என அறியலாம்.
இவ்வாறு தவம் செய்து பரப்பிரம்ம சொரூபத்தின் அடிமுடிகளை கண்ட நால்வர் கூறும் சான்றுகளை கேட்போம்.
சம்பந்தர்
1. அயனுமால் அறிவரியீர் உமதடி தொழும்
இயலுளார் மறுபிறப் பிலமே.
திருஇன்னம்பர் தேவாரம்
2. ஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்கும்
காணொணா வண்ணத்தான் கருதுவார் மனத்துளான்
திருஉசாத்தனம் தேவாரம்
1. தேடிக்கண்டு கொண்டேன்
திருமாலொடுநான் முகனும்
தேடித் தேடொண்த் தேவனை
என்னுளே தேடிக்கண்டு கொண்டேன்
– திருஅங்கமாலை
2. அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினைமின்கள்
பொள்ளலிக் காயந்தன்னுள் புண்டரீகத் திருந்த
வள்ளலை வானவர்க்கும் காண்பரிதாகி நின்ற
துள்ளலைத் துருத்தியானைத்தொண்ட னேன் கண்டவாறே .
– திருத்திருத்தி 6 ( பக்கம் 207 )
சுந்தரர்
1.
பொய்யா நாவதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நன்றெரியும் விளக்கே ஒத்ததேவர் பிரான்
––திருக்கழிப்பாலை 9. ( பக்கம் 5 )
2.
நாடும் காட்டில் அயனும் மாலும்
நணுகா வண்ணம் அனுலம் ஆய
வேடம் கட்டித் திரிவ தென்னே
திருவெண்காடு 9 ( பக்கம் 7 )
மாணிக்கவாசகர்
1.
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
– 7 திருவெம்பாவை 174
2.
தேவரும் அறியாச் சிவனே காண்க
பெண்ஆண் அலியெனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானும் கண்டேன் காண்க
– திருவண்டப்பகுதி வரி 56 – 58