உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கடையூர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்.

திருக்கடையூர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்.

மயிலாடுதுறை: திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா பஞ்சமுக கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. ஆண்டுதோறும் 14 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வந்து கொடிமரம் அருகில் எழுந்தருளினர். அதனை அடுத்து கொடி மரங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 11 மணிக்கு மிதுன லக்னத்தில் மங்கள வாத்தியங்கள் இசைக்க, அதிர்வேட்டுகள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத, சித்திரை திருவிழா பஞ்சமுக கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரங்களுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தருமபுரம் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாதர் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூஜைகளை கணேஷ் மற்றும் மகேஷ் சிவாச்சாரியார்கள் தலைமையிலானோர் செய்துவைத்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து மாலை சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 9ஆம் தேதி மாலை திருக்கல்யாணம், 11ம் தேதி சகோபர வீதியுலா, 12ஆம் தேதி இரவு எமத சம்ஹாரம், 14ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம், 16ஆம் தேதி தீர்த்தவாரி, 18ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரி ஸ்ரீராம் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !