ராமநவமி : சரயு நதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு
உத்தரபிரதேசம்: ராமநவமியை முன்னிட்டு, இன்று சரயு நதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் சரயு நதிக்கரையில் அமைந்துள்ள, (அக்காலத்தில் கோசல நாட்டின் தலைநகரான) அயோத்தி மாநகரில் இதேநாளில் ஸ்ரீராமபிரான் அவதரித்தார். அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமியில் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமர் கோயில் கட்டுமானம் தொடங்கிய பின்னர், இப்போது தான் பிரம்மாண்ட விழாவுக்கு உ.பி. அரசு ஏற்பாடு செய்துள்ளது. அங்கு கடந்த 2ம் தேதி ஸ்ரீராமநவமி விழா தொடங்கியது. இந்த 9 நாள் விழாவை சைத்ர நவராத்திரி என்கிறார்கள். நேற்று சுமார் 20 லட்சம் பேர் அங்கு திரண்டனர். நிறைவு நாளான இன்று பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகமாகும். பாலாலயம் செய்யப்பட்டு உள்ள சந்நிதியில் ஸ்ரீராமநவமி பூஜைகள் விமரிசையாக நடக்கின்றன. இந்நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதுதவிர, அயோத்தியில் 8 இடங்களில் ஆன்மிக கலைவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.