உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் திருத்தேர் விழா

செஞ்சி கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் திருத்தேர் விழா

செஞ்சி: செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில் ஆயிரக்கண பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

செஞ்சிக்கோட்டை ராஜகிரி மலை மீது பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான கமலக்கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல நுாறு ஆண்டுகளாக தேர்திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 2ம் தேதி மகா மாரியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை கமலக்கன்னியம்மன், ராஜகாளியம்மன், மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. தினமும் விசேஷ அபிஷேகமும், இரவு வாணவேடிக்கையுடன் பூங்கரகம் மற்றும் சாமி வீதி உலா நடந்தது. நேற்று 9ம் நாள் விழாவாக காலை மகா மாரியம்மனுக்கு 108 பால் குடம் அபிஷேகம் செய்தனர். மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது. ராஜகிரி கோட்டை காளியம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபாடும், மலை குகையில் உள்ள திரிசூலத்திற்கு சிறப்பு அபிஷேகமும் செய்தனர். பகல் 3 மணிக்கு ராஜாகிரி கோட்டை பிரதான வாயிலிலும், பீரங்கிமேடு மந்தை வெளியிலும் பாரம்பரிய முறைப்படி எறுமை கிடா பலிகொடுத்தனர். மாலை 4.40 மணிக்கு 41 அடி உயர தேரில் மாரியம்மன், கமலக்கன்னியம்மன் மற்றும் காளியம்மன் திரிசூலத்தை ஏற்றி, சிறப்பு பூஜைகள் செய்து திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கியது. திருவள்ளுவர் தெரு, திருவண்ணாமலை ரோடு, விழுப்புரம் ரோடு, சந்திரத்தெரு வழியாக தேர் பவனி நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். தானியம், காய்கனி, நாணயங்களை தேரின் மீது வாரி இறைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !