மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் துவக்கம்
மதுரை : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் நேற்று ஜுன் 03ல் துவங்கியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடந்தோறும் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். கடந்த மாதம் உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடந்தது. மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவ விழா நேற்று (ஜுன் 03ல்) துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின்போது தினமும் மாலை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி புது மண்டபம் சென்று பின்னர் 4 சித்திரை வீதிகளில் வலம் வருவார். விழாவின் நிறைவு நாளான 12-ந் தேதி காலையில் சுந்தரேசுவரர்-மீனாட்சி புது மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அன்றைய நாள் முழுவதும் அங்கு இருக்கும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். மாலையில் மீண்டும் சன்னதிக்கு திரும்புகிறார்கள். வைகாசி வசந்த உற்சவம் திருவிழாவின்போது உபய தங்கரதம், உபயதிருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறாது.