உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்காசி மேலசங்கரன்கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

தென்காசி மேலசங்கரன்கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

தென்காசி : தென்காசி மேலசங்கரன்கோயிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது. தென்காசி மேலசங்கரன்கோயிலில் கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் ஆடித்தபசு திருவிழா துவங்கியது. தொடர்ந்து  ஒவ்வொரு நாளும் கோமதியம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். விழாவின் முக்கிய நாளான 1ம்  தேதி மாலையில் தெற்கு ரதவீதியில் சுவாமி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுத்த தபசு காட்சி நடந்தது. விழாவின்  இறுதி நாளான 2ம் தேதி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு கொடிமரம்  அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடைக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். சுவாமிக்கு மாப்பிள்ளை அலங்காரமும்,  அம்பாளுக்கு மணமகள் அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் வேத மந்திரங்கள் கூற, மேள தாளம் முழங்க, பக்தர்களின் பக்தி  கோஷங்கள் விண்ணை முட்ட சுவாமி அம்பாள் கழுத்தில் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து  கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !