திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் விமரிசை
திருச்செங்கோடு : திருச்செங்கோடில் உள்ள பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில், வைகாசி விசாகத்தேர் திருவிழா, ஜூன், 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவிழாவின் 10வது நாள் நிகழ்ச்சியாக, அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மூன்று நாள் நடக்கும் தேரோட்டத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வடம் பிடித்து துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருச்செங்கோடு கிழக்கு ரத வீதி தேரடியிலிருந்து துவங்கிய தேரோட்டம், நேற்று திருச்செங்கோடு பழக்கடை கார்னரில் முடிவடைந்தது. இன்று வடக்கு ரதவீதியில் நிலை நிறுத்தப்படும்.நாளை, வடக்கு ரதவீதியில் இருந்து, கிழக்கு ரதவீதிக்கு இழுத்து வரப்பட்டு தேர் நிலை நிறுத்தப்படும். பின், ஆதிகேசவ பெருமாள் தேர் பக்தர்களால் வடம் பிடிக்கப்படும்.