பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துபந்தல் விழா
ADDED :1313 days ago
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில், தேனுபுரீஸ்வரர் கோவிலில், திருஞானசம்பந்தர் எழுந்தருளிய முத்துபந்தல் பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் கோவில் பாடல் பெற்ற தலம். காமதேனுவின் 4 பெண்களுள் பட்டி என்பவள் தேனுபுரீஸ்வரரை நாள்தோறும் பூஜித்து முக்தி பெற்றதால் இத்தலத்திற்கு பட்டீஸ்வரம் என பெயர் வந்தது. இக்கோவிலில் ஆனி மாதத்தில் முத்துபந்தல் விழா நடைபெறும். அதன்படி திருஞானசம்பந்தர், தேனுபுரீஸ்வரர் வழங்கி அருளிய முத்துபந்தலில் காட்சி அளித்து தேனுபுரீஸ்வரரை வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், 30 அடி நீளமும், 20 அடி உயரமும் உள்ள முத்து பல்லக்கினை சுமந்துகொண்டு சென்றனர். வழியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நின்று வழிப்பட்டனர்.