வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம்
ADDED :1351 days ago
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன உற்சவம் நடந்தது. சிவபெருமான் கோவிலில் வீற்றுள்ள நடராஜருக்கு நடக்கும் அபிஷேக உற்சவங்களில், ஆனி திருமஞ்சனம் குறிப்பிடத்தக்கது. ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், இந்த உற்சவம் நடைபெறும். இந்நாளான நேற்று, திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி ஆகியோருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இருவரும், கோவில் வளாக ரிஷப தீர்த்தகுளத்தை அடைந்தனர்.அங்கு சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து, சுவாமி அம்சமான அஸ்தராயர், குளத்தில் புனித நீராடி, தீர்த்தவாரி உற்சவம் கண்டார். மாடவீதிகளில் வீதியுலா சென்று, கோவிலை அடைந்தார். பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.