தர்மராஜா கோவிலில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி கோலாகலம்
ADDED :1301 days ago
உத்திரமேரூர்: கம்மாளம்பூண்டி, திரவுபதியம்மன் கோவில், அக்னி வசந்த விழாவையொட்டி, அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கம்மாளம்பூண்டி கிராமம். இக்கிராமத்தில், தர்மராஜா உடனுறை திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் அக்னி வசந்த உற்சவம் நடப்பது வழக்கம். இந்தாண்டிற்கான விழா ஜூன் மாதம் 23ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 3ம் தேதி, உற்சவர் அர்ச்சுனனுக்கும், சுபத்திரை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. 6ம் தேதி இரவு நடைபெற்ற மகாபாரத நாடகத்தை தொடர்ந்து, 7ம் தேதி காலையில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. நாளை காலை, துரியோதனன் படுகளமும், மாலை, தீமிதி விழாவும் நடைபெறுகிறது.