உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் புரட்டாசி அமாவாசை வழிபாடு; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சதுரகிரியில் புரட்டாசி அமாவாசை வழிபாடு; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் பக்தர்கள் குவியத் துவங்கினர். அதிகாலையில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு, கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் திரண்டு, கடும் நெரிசல் ஏற்பட்டது. காலை 6:00 மணிக்குமேல் கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் ஒரு மணி வரை, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு சிறப்பு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். கோயிலில் திரண்டிருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !