உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் பூசாரி கையால் தாலி கட்டி கொண்ட திருநங்கைகள்

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் பூசாரி கையால் தாலி கட்டி கொண்ட திருநங்கைகள்

உளுந்தூர்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள், பக்தர்கள் பூசாரிகளின் கையால் தாலி கட்டி கொண்டு, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி மாலை 4 மணியளவில் சாகை வார்த்தலுடன் விழா துவங்கியது. இவ்விழாவையொட்டி கூவாகம், கூவாகம் காலனி, தொட்டி, நத்தம், அண்ணா நகர், செவிலியங்குளம், பாரதிநகர் உள்ளிட்ட 7 கிராமங்களில் இருந்து பெண்கள் கஞ்சி கலயங்களை எடுத்து வந்து கோவிலில் வைத்து ஸ்ரீ மாரியம்மனுக்கு படையலிட்டனர். இதில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.  15ம் தேதி மாலை 4 மணியளவில் பந்தலடி தெய்வநாயகம் தோப்பில் ஊர் பிரமுகர்களுக்கு தாலிகட்டுதல்( பாரதம் ஆரம்பம்) நிகழ்ச்சி நடந்தது.16ம் தேதி சந்தனு சரிதம், இரவு 10 மணியளவில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடந்தது. 17ம் தேதி பீஷ்மர் பிறப்பு, 18ம் தேதி தர்மர் பிறப்பும், 19ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், 20ம் தேதி பகாசூரன் வதம் செய்தல் நிகழ்ச்சி நடந்தது. 21ம் தேதி பாஞ்சாலி திருமணமும், 22ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும், 23ம் தேதி ராஜசூய யாகம் நடந்தது. 24ம் தேதி விராடபர்வம் தெய்வநாயகம் தோப்பில் வெள்ளி கால் நடுதலும், 25ம் தேதி கிருஷ்ணன் தூது நிகழ்ச்சி நடந்தது. 26ம் தேதி காலை அரவான் பலியிடுதலும், கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாலயம் நடந்தது.  நேற்று மாலை கம்பம் நிறுத்துதல் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி திருக்கண் திறப்பு நிகழ்ச்சியும், திருநங்கைகள் (அரவாணிகள்) பக்தர்கள் பூசாரிகளின் கையால் தாலி கட்டி கொண்டனர். பின்னர் இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.  அப்போது திருநங்கைகள், பக்தர்கள் புத்தாடை உடுத்திக் கொண்டு வந்தியிருந்தனர். இத்திருவிழாவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். நாளை ( 29ம் தேதி) காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. மாலை பந்தலடி தெய்வநாயகம் தோப்பில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 30ம் தேதி விடையாத்தி நிகழ்ச்சியும், 1ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !