பண்ணாரியில் குவிந்த பக்தர்கள் : காத்திருந்து சுவாமி தரிசனம்
ஈரோடு : தமிழகத்தின் பிரசித்த பெற்ற கோவில்களில் ஒன்றான பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நேற்று புரட்டாசி மாத மஹாளய அமாவாசையன்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மஹாளய அமாவாசை என்பதால் திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டும், முடிகாணிக்கை செலுத்தியும் சென்றனர். ஈரோடு, திருப்பூர், புளியம்பட்டி, பவானிசாகர், சத்தியமங்கலம், அவிநாசி, சேலம், அந்தியூர், உள்ளிட்ட ஊர்களிலிருந்து 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதேபோல் சத்தியமங்கலம் வேணுகோபாலசுவாமி திருக்கோவில், தவளகிரி தண்டாயுதபாணி கோவில், அங்காளம்மன்கோவில், தண்டுமாரியம்மன் கோவில், உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.