திருப்புத்தூர் கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்
திருப்புத்தூர்: திருப்புத்தூர் கோயில்களில் நவராத்திரி விழா துவங்கியது. திருத்தளிநாதர் கோயில் திருநாள் மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கொலுவில் உற்ஸவ அம்பாளுக்கு சிவகாமி அம்மன் அலங்காரம் நடந்தது. மூலவர் அம்பாளுக்கு காமேஸ்வரி அலங்காரம் நடந்து சிறப்பு தீபாராதனையுடன் விழா துவங்கியது. நேற்று ராஜ அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலித்தார். இன்று மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்பாள் தரிசனம் தருகிறார்.
பூமாயி அம்மன் கோயிலில் அலங்கார மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்து சிறப்புத் தீபாராதனை நடந்தது. லட்சார்ச்சனையுடன் விழா துவங்கியது.நேற்று தெய்வானை திருக்கல்யாணம் அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தி அம்மனை பிரார்த்தித்தனர். இன்று மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார். நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று காலை மகாலெட்சுமிக்கு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. கொலு மண்டபத்தில் கொலு அலங்காரிக்கப்பட்டு ஊஞ்சலில் மகாலெட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலையில் சிறப்புத் தீபாராதனையுடன் விழா துவங்கியது.