மயிலாடுதுறையில் துலா உற்சவம் தொடக்கம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 30 நாட்கள் நடைபெறும் ஐப்பசி துலா உற்சவம் தீர்த்த வாரியுடன் தொடங்கியது.
மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இவ்வாண்டு ஐப்பசி மாதம் முதல் நாளான இன்று (18ம் தேதி) துலா உற்சவம் தீர்த்தவாரியுடன் தொடங்கியது. திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மயூரநாதர், அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாரப்பர், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் பஞ்சமூர்த்திளுடன் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருள ஆஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடப்பது வழக்கம். ஆனால் இவ்வாண்டு மாயூரநாதர் கோவில் கும்பாபிஷேக திருப்பணி நடைபெறுவதால் துலா உற்சவத்திற்கு சுவாமி புறப்படு கிடையாது. ஆனால் ஐயாறப்பர் கோவில், வள்ளலார் கோவில், காசி விசுவநாதர் கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் காவிரி கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.