காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்
காரமடை: காரமடை அரங்கநாதர் கோவிலில், கார்த்திகை மாத ஏகாதசி வைபவம் நடந்தது.
கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். நேற்று கார்த்திகை மாத தேய்பிறை கிருஷ்ண பட்ச ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், விஸ்வரூப தரிசனம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டன. கால சந்தி பூஜை புண்ணியாக வசனம், கலச ஆவாஹனம் நெய், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவிய பொருட்களால், ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சப்பரத்தில், அரங்கநாத பெருமாள், கோவிலை வலம் வந்தார். உச்சிக்கால பூஜைக்கு பின் சற்று முறை முடிந்த பிறகு, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.