சங்கர லிங்க சுவாமி கோயிலில் சோமவார 108 சங்காபிஷேகம்
மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மாத, வளர்பிறை இரண்டாவது சோமவார சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு, 108 வெண் சங்குகளில் ராமேஸ்வரம் கோயிலில் இருந்து எடுத்து வரப்பெற்ற கோடி தீர்த்தம் நிரப்பப்பெற்று, கும்பம் வைத்து யாகசாலை அக்னி மகா ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அருள்மிகு சங்கரலிங்கம் சுவாமிக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்களும், கோடி தீர்த்தம் நிரப்பி பூஜை செய்த 108 சங்காபிஷேகமும், கும்பம் புனித நீராலும் அபிஷேகம் நடைபெற்றது. சங்கர லிங்கம் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். இன்றைய இறைப் பணியில் தும்பைப்பட்டி, கோட்டப்பட்டி, கட்சிராயன்பட்டி, மேலூர், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, சுக்காம்பட்டி, ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சங்கரன் பங்காளிகள் குடும்பத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் கோளாறு பதிகம், நந்தியம் பதிகம் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு புளியோதரை, அபிஷேக பால், பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , அரவிந்த், சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.