மதநல்லிணக்க கந்தூரி விழா திரளான ஹிந்துக்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம்: நாகை அடுத்த மேலநாகூரில் பழமையான தர்காவில் நடைபெற்ற மத நல்லிணக்க கந்தூரி விழாவில் ஏராளமான ஹிந்துக்கள் கலந்துக் கொண்டனர்.
நாகை அடுத்த மேல நாகூரில் அமைந்துள்ளது ஹாஜா மஹ்தூம் ஆண்டவர் தர்கா. 400 ஆண்டுகள் பழமையான இத் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெறும். நிகழ்ச்சியில் ஜாதி, மத பேதமின்றி ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் கலந்துக் கொள்வது வழக்கம். இவ்வாண்டு கந்தூரி விழாவினை முன்னிட்டு நேற்று மாலை தாஹிரா இசையுடன் பக்கீர்மார்கள் கொடி மற்றும் சந்தன குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர். சிறப்பு துவா ஓதப்பட்டு, வானவேடிக்கைகள் முழங்க கொடியேற்றத்துக்கு பின், தர்கா சன்னதியில் தர்கா டிரஸ்டி சுல்தான் கபீர் சாஹிப் தலைமையில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என திரளானவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதமாக சந்தனம் வழங்கப்பட்டது.