அச்சன்கோவில் திருஆபரண பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு: பக்தர்கள் தரிசனம்
தென்காசி: அச்சன்கோவில் ஐயப்பன் கோவில் திருஆபரணப்பெட்டிக்கு தென்காசியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரள மாநிலம் அச்சன்கோவிலில் உள்ள ஐயப்பன் கோவிலில் மகோத்சவ விழா இன்று 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா 10 நாட்கள் சிறப்பாக நடக்கிறது. அப்போது ஐயப்பனுக்கு தங்கம், வைரம் வைடூரியங்களால் ஆன திருஆபரணங்கள் அணிவிக்கப்படுவது வழக்கம். ஐயப்பன் கோவில் திருஆபரணங்கள் கேரள மாநிலம் புனலூரில் உள்ள அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஐயப்பனுக்கு அணிவிக்க வேண்டிய முககவசம் மார்பு கவசம், தங்க வாள், கருப்பன் கவசங்கள் கொண்ட திருஆபரணப்பட்டி நேற்று புனலூரில் இருந்து வாகனத்தில் இரு மாநில போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் புளியரை சோதனை சாவடி, செங்கோட்டை வழியாக தென்காசி வந்தது. தென்காசி காசிவிஸ்வநாதர் சுவாமி கோயில் முன்பாக வரவேற்பு குழு தலைவர் ஹரிஹரன் தலைமையில் நிர்வாகிகள் மாடசாமி ஜோதிடர், மாரிமுத்து, சுப்பராஜ், அழகிரி உள்ளிட்டவர் வரவேற்பளித்தனர். பின்னர் திருஆபரணப்பெட்டி வாகனம் பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவில் கொண்டு செல்லப்பட்டது.