அருள் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
மோகனூர்: கீழப்பேட்டப்பாளையம் அருள் மாரியம்மன், விநாயகர் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.
மோகனூர் யூனியன், கீழப்பேட்டப்பாளையத்தில், அருள் விநாயகர், அருள் மாரியம்மன், மதுரைவீரன் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேக விழா நடந்தது. அதை தொடர்ந்து, கோவில் புதுப்பிக்கும் பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கியது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று, கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, கடந்த மாதம், 31ம் தேதி, கணபதி, மகா மற்றும் நவக்கிரக ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று காலை, 7.30 மணிக்கு, இரண்டாம் காலயாக பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடந்தது.காலை, 9 மணிக்கு, யாக சாலையில் இருந்து சக்தி கலசம் புறப்பட்டு ஊர்வலமாக சென்றது. அதை தொடர்ந்து, அருள் விநாயகர், மாரியம்மன், மதுரை வீரன் ஆகிய ஸ்வாமிகளுக்கு, மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஸ்வாமி தரிசனம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.