உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறை: சீர்காழி அருகே 100  ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில் பழமைவாய்ந்த  தர்மராஜா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இன்று தீமிதி திருவிழா  நடைபெற்றது. தீமிதி திருவிழாவை  முன்னிட்டு கடந்த 25 ம் தேதி கொடி ஏற்றப்பட்டு  தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்  அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் நாள் தீமிதி உற்சவ திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு தர்மராஜா மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீக்குழி முன்பு எழுந்தருளினார்.  இதனை தொடர்ந்து  மாலை புரவாய்க்காலில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் மற்றும் அலகு காவடிகள் மேல தாலங்கள் முழங்க  வருகை புரிந்து  கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட தீ குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுருந்தனர். முன்னதாக இன்று  காலை அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் இருந்து திரளான பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பால்குடம், அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !