காஞ்சி வரதர் கோவில் கோபுர கலசம் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED :1164 days ago
காஞ்சிபுரம்: அத்திவரதர் அனந்தரசரஸ் திருக்குளத்தில், சயன நிலையில் வீற்றிருக்கும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில் 44வது திவ்யதேசமாக விளங்கி வருகிறது.
உலகப்புகழ் பெற்ற இக்கோவிலில் இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளன. இதில், கோவில் முன்பக்கம் அமைந்துள்ள மேற்கு ராஜகோபுரம், 96 அடி உயரமும், 92.5 அடி அகலமும் கொண்டது. கோவில் பின்புறமுள்ள கிழக்கு ராஜகோபுரம், 125 அடி உயரமும், 99 அடி அகலமும் உடையது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவில் கிழக்கு ராஜகோபுரத்தில் உள்ள, 11 கலசங்களில் இரண்டு கலசங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், ஒரு சில கலசங்கள் லேசாக சாய்ந்த நிலையில் உள்ளன. எனவே, கிழக்கு ராஜகோபுரத்தில் உள்ள பழைய கலசங்களை அகற்றி புதிய கலசங்கள் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.