மடப்புரம் காளி கோயிலில் வைர மூக்குத்திகள் திருட்டு, பக்தர்கள் அதிர்ச்சி
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மன் சிலையில் இருந்த வைர மூக்குத்திகள் திருட்டு போன சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பிரம்மாண்ட குதிரையின் கீழ் அம்மன் ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறார். அம்மன் முகத்தில் இரண்டு வைர மூக்குத்திகள் பொருத்தப்பட்டிருந்தன. பூஜையின் போது தீபாராதனை வெளிச்சத்தில் வைர மூக்குத்தி மின்னுவது பக்தர்களை பரவசமடைய செய்யும், நேற்று முன்தினம் இரவு பச்சை துண்டை முகத்தில் மறைத்து வந்த மர்மநபர் சர்வ சாதாரணமாக கோயில் வளாகத்தில் உலா வந்து அம்மன் மூக்குத்திகளை கழட்டி கொண்டு குதிரையின் கால்கள் வழியாக வெளியேறியுள்ளார். நேற்று காலை பூஜையின் போது திருட்டுச்சம்பவம் அறிந்த கோயில் நிர்வாகம் திருப்புவனம் போலீசில் புகார் செய்துள்ளனர். கோயில் வளாகம் முழுவதும் சி.சி.டி.வி., கேமரா பொருத்தி முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன் தலைமையில் இரண்டு பேர் இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் இருந்த போதும் திருட்டுச்சம்பவம் நடந்துள்ளது. கோயிலில் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக மர்ம நபர் உலா வந்துள்ளார். பாதுகாவலர்கள் யாருக்கும் தெரியவில்லை.
கோயில் நிர்வாகம் சார்பில் கூறுகையில்: வைர மூக்குத்தி கிடையாது, ஏ.டி.,கல் என கூறப்படும் வைரத்திற்கு அடுத்தபடியான கல் நகை அது, ஒரு பக்கம் 22 கிராம் மறுபக்கம் 25 கிராம் எடையுள்ள தங்க பொருள் தான் போலீசில் புகார் கொடுத்துள்ளோம், என்றனர்.
பக்தர்கள் கூறுகையில்: பகலில் கோயில் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் பக்தர்களை அலைக்கழிப்பது, அவதூறாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கோயிலில் முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது கிடையாது. இரவு நேரத்தில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பது கிடையாது, போதையில் தூங்குகின்றனர், என்றனர். கோயிலில் மர்மநபர் உலா வந்து திருடும் சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.