நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா : பக்தர்கள் நேர்த்திக்கடன்
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா நாளை நடக்கிறது. 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக் கட்டி 15 நாள் விரதம் இருந்து பூக்குழி இறங்குகின்றனர்.
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பூக்குழி பெருந்திருவிழா கடந்த பிப்.20 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்.21 பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்க்கதில் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து கோயிலில் தற்போது வரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக் கட்டி 15 நாட்கள் விரதம் இருந்து வருகின்றனர். அன்றிரவு அம்மன் குளத்திலிருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட கம்பம் கோவிலில் வைக்கப்பட்டு அதில் பக்தர்கள் பால் ஊற்றி தரிசனம் செய்து வருகின்றனர். பிப்.24 அம்மன் மயில் வாகனத்தில் பவனியும், பிப்.27 தேர்ச்சட்டம் போடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. பிப்.28 அம்மன் சிம்மம் வாகனத்திலும், மார்ச் 3 காலை பூக்குழி கண் திறத்தல் நிகழ்ச்சியும், அன்று இரவு அம்மன் சரஸ்வதியாக அன்ன வாகனத்திலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தினமும் கோவிலில் பக்தர்கள் பால்குடம், கரும்புத் தொட்டில், மாவிளக்கு, அங்கப்பிரதட்சணம், பொங்கல் வைத்தல், அபிஷேக தீர்த்தம் எடுத்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மார்ச்.7 அதிகாலை 3 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல் அழகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துவர். தொடர்ந்து காந்திநகர் பொது மக்களால் கழுகு மரம் ஊன்றி, காமராஜ் நகர் பொதுமக்களால் கழுவு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடக்கும். கழுகு மரம் ஏறி முடிந்தவுடன் கோவில் பரம்பரை அறக்காவலர் பூசாரிகள் பூக்குழி இறங்க, அம்மன் குளத்தில் புனித நீராடி வரும் காப்புக் கட்டிய 45 ஆயிரம் பக்தர்களும் பூக்குழி இறங்குவர். விழாவின் நிறைவாக மார்ச் 8 காலை 6 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி அம்மன் குளம் சென்றடைதல் நிகழ்ச்சி நடக்கும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மாரியம்மன் பூப்பல்லக்கில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அதிகாலை 4.30 மணிக்கு கோவிலுக்கு வருவதுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.