பங்குனி திருவிழா: பூதகி வாகனத்தில் முத்தாலம்மன் உலா
ADDED :917 days ago
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு அம்மன் உடுக்கை, நாகம் ஏந்தி, வெள்ளி திரிசூலத்துடன் பூதகி வாகனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பாலித்தார். அப்போது ஆயிர வைசிய மகளிர் அணியினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் நூற்றுக்கணக்கானோர் சுவாமிகளின் வேடமிட்டு ஆடி பாடி ஊர்வலமாக சென்றனர். இன்று காலை அம்மன் பல்லக்கில் வெள்ளி ஏந்தி முருகன் திருக்கோலத்தில், மயில் தோகை மாலை அணிந்து வலம் வந்தார். நாளை மறுநாள் காலை அம்மன் 8 கைகளுடன் காளி அலங்காரமும், மாலை வண்டி மாகாளி வேஷம் நடக்க உள்ளது.