ஹஜ் பயணம் அக்., 2ல் துவக்கம்!
ADDED :4960 days ago
சென்னை :சென்னையிலிருந்து, முதல் கட்ட ஹஜ் பயணம், அக்., 2ல் துவங்குகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான்-நிகோபார் தீவுகளைச் சேர்ந்த, 3,800 பேர் சென்னையிலிருந்து, ஒன்பது விமானங்களில் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். வரும், அக்., 2ம் தேதி, முதல் விமானம் இயக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது ஜான், அரசு செயலர் தங்க.கலியபெருமாள், மாநில ஹஜ் குழுவின் செயல் அலுவலர் அலாவுதீன் ஆகியோர், ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில், பயணிகளுக்கு, தங்குமிட வசதி, உடைமைகளை ஒப்படைத்தல், டிக்கெட், பாஸ்போர்ட் வழங்குதல், அன்னிய செலாவணி வழங்குதல், கலால் தொடர்பான அனுமதி பெறுவது தொடர்பான, பல்வேறு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.