உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுமழை பெய்ததால் பொன் ஏர் இட்ட விவசாயிகள்

புதுமழை பெய்ததால் பொன் ஏர் இட்ட விவசாயிகள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் இந்தாண்டின் புதுமழை பொழிந்ததை தொடர்ந்து பொன் ஏர் இட்டு விவசாயப்பணிகள் துவக்கப்பட்டது.

இப்பகுதியில் தமிழ் வருட பிறப்புக்கு பின்னர் பெய்யும் முதல் மழைக்கு பிறகு ஒரு நல்ல நாளில் விவசாயிகள் பொன் ஏர் இடுவது வழக்கம். ஏப். 22 ல் சோபகிருது ஆண்டின் புதுமழை பெய்தது. இதை தொடர்ந்து இப்பகுதி மக்கள் நேற்று பொன் ஏர் இட்டு விவசாயப்பணிகளை துவக்கினர். காலை 9:30 மணிக்கு சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் நிலத்தில் நாட்டார்கள் சார்பில் பாரம்பரிய முறைப்படி பொன் ஏர் இடப்பட்டது. தொடர்ந்து அவரவர் விவசாய நிலங்களில் பெண்கள் குப்பை கொட்ட, ஆண்கள் பொன் ஏர் இட்டனர்.

சி.தனுஷ்கோடி, ஓய்வு பெற்ற ஆசிரியர்: தமிழ் புத்தாண்டு பிறந்ததும் விவசாய நிலங்களில் பொன் ஏர் இடுவது தமிழர்களின் வழக்கம். சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் புது மழை பெய்த பிறகு நல்ல நாள் குறித்து ஏர் இடப்படும். கோயில் நிலத்தில் கோயில் மாடுகளைக் கொண்டு பொன் ஏர் இடப்பட்ட பிறகு மற்ற பகுதிகளில் ஏர் இடப்படும். அந்தந்த பகுதி மக்கள் தங்கள் குலதெய்வ கோயில்களில் ஏர், கலப்பை, மண்வெட்டி உள்ளிட்ட விவசாயக் கருவிகளை வரிசையாக வைத்து வழிபாடு நடத்தி விட்டு அங்கிருந்து அவரவர் நிலங்களுக்கு சென்று பொன் ஏர் இடுவர். பிறகு மீண்டும் கோயிலில் கூடி அங்கிருந்து வீடுகளுக்கு திரும்பிச் செல்வது வழக்கம். இது ஆதிகாலம் தொட்டு பாரம்பரியமாக நடந்து வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !