புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழுவிற்கு காத்திருக்கும் சவாலான கோரிக்கைகள்
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவியேற்றதை தொடர்ந்து,கோவிலில் உள்ள நடைமுறைகள்,கும்பாபிஷேக பணிகள்,சிவாச்சாரியார்களின் பங்குத்தொகை நிலுவை,பக்தர்களின் அடிப்படை வசதிகள் உள்பட நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் என அறங்காவலர் குழுவிற்கான பட்டியல் காத்துக் கொண்டிருக்கிறது. கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான சிவாலயமாக விளங்குவது ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ஆகும்.பல்வேறு புராதானமிக்க சிறப்புடைய கோவிலில்,கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அறங்காவலர் குழுவின் உறுப்பினர்கள் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த மாதம் 26ம் தேதி ஐந்து பேர் கொண்ட உறுப்பினர்களை அறங்காவலர் குழுவாக நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது.
இதில் நேற்று முன்தினம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவராக இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் நியமனம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து ஒரு பெண் உள்பட நான்கு பேர் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கிடையில் கோவிலில் உள்ள நடைமுறைகள்,கும்பாபிஷேக திருப்பணிகள்,சிவாச்சாரியார்களுக்கு நிலுவை வைத்துள்ள பங்குத்தொகை, பக்தர்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அகில பாரத அனுமன் சேனா இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தியாகராஜன் கூறுகிறார். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த 2018ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதன் பிறகு ஏறத்தாழ 14 ஆண்டுகள் கடந்த பிறகும் தற்போது வரை கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான ஆரம்பகட்ட திருப்பணிகள் கூட துவங்கவில்லை.
கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான கோவிலில் உள்ள சிலைகள்,பீடங்கள், சிதிலமடைந்த மண்டபங்கள், கோபுரங்கள் ஆகியவற்றை முதலில் மராமத்து பராமரிப்பு பணிகள் மேற்கொண்ட பிறகு அனைத்து பகுதிகளுக்கும் வர்ணம் பூசும் வேலை தொடங்கும். இந்த கோவிலில் மட்டும் அதற்கு விதிவிலக்காக எந்த ஒரு சன்னதிக்கும் திருப்பணிகள் துவங்காமல் நேரடியாக ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் ராஜகோபுரத்திற்கு வர்ணம் பூசும் வேலைகள் தொடங்கியுள்ளது. மேற்கொண்டு கோவிலில் சபாமண்டபம், திருக்கல்யாண மண்டபம்,மூலவர் சன்னதியில் பணிகள்,செந்தில் ஆண்டவர் சன்னதி,சுற்றுப் பிரகாரத்தில் உள்ள நவகிரக சன்னதி என பலகட்டமாக திருப்பணிகளுக்கான மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் தலைகீழாக வேலையை முதலில் தொடங்கியுள்ளனர். கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளில் இருந்தும் வெளியேறும் தீர்த்த நீர் முறையான வடிகால் இல்லாததால் கோவில் உள்புறத்திலேயே தேங்கி துர்நாற்றம் எழுந்து பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது.அதனை முறையாக வெளியேற்ற வழி செய்ய வேண்டும். உடனடியாக திருப்பணி குழு ஒன்றை ஆரம்பித்து கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான அனைத்து கட்ட ஆயத்த வேலைகளையும் ஆய்வு செய்து அறங்காவலர் குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல கோவிலில் மூன்று ஸ்தானிகத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்களின் குடும்பங்களில் மொத்தம் 57 சிவாச்சாரியார்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.இவர்களின் நாள்தோறும் வாழ்வாதாரத்திற்கான ஊதியமாக அர்ச்சனை,கோவிலில் நடைபெறும் ஹோமபூஜைகள், திருமணம் ஆகியவற்றில் இருந்து பங்குத் தொகையாக சேர வேண்டிய பணத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் குறைந்தபட்ச ஊதியத்தில் இறைவனுக்கு சேவகம் செய்து வரும் சிவாச்சாரியார்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது.
கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் இன்றியமையாததாக உள்ளது.வாரத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே குடிநீர் இருப்பதாகவும் மற்ற நாட்களில் குடிப்பதற்கு வைக்கப்பட்டுள்ள இடத்தில் தண்ணீர் வருவதில்லை என பல தடவை பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலை மாறி கோவிலில் உள்ள சுற்றுப் பிரகாரம் நான்கு பகுதிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைத்து பக்தர்கள் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.தற்போது வடநாட்டு பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வந்து செல்வதால் திருமணம்,பிரதோஷம்,தேர் விழா போன்ற முக்கிய தினங்களில் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். அவ்வாறு பல மணி நேரம் வெயிலில் காத்திருக்கும் பக்தர்கள் படும் துன்பம் சொல்லி மாளாது. அதிகளவிலான கூட்ட நெரிசலில்,வெயிலில் கியூவில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. அறங்காவலர் குழு கோவில் பணியில் தலையாயக் கடமையாக பக்தர்கள் நிழலில் நின்று கியூவில் சென்று தரிசனம் செய்வதை முதல் பணியாக செய்திட வேண்டும். ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் அன்னதான கூடத்தில் பக்தர்களை தரக்குறைவாக நடத்துவதாக பலமுறை புகார் எழுந்துள்ளது.அதனையும் அறங்காவலர் குழு கண்காணிக்க வேண்டும். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு தலபுராணம் என ஒன்று உள்ளதைப் போல அதற்கான வரலாற்றுச் சுவடுகளும் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதனை வழி வகையாக எடுத்து ஆகம விதிகள் மாறாமல் கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஊர் மக்களுக்கு உரிய சம்பிரதாயங்கள் அளித்திடவும் அதற்கான நடைமுறைகளை பின்பற்றி நடந்திடவும் அறங்காவலர் குழு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.