உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 23 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட முருகன் சிலை; அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

23 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட முருகன் சிலை; அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

சென்னை, தமிழகத்தில் இருந்து, 23 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட முருகன் கற்சிலை, அமெரிக்காவில் இருப்பதை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்து உள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் கிராமத்தில், மிகவும் பழமையான அமிர்தகடேஸ்வரர் கோவில் இருந்தது. இக்கோவிலை, டில்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிகாபூர் படையெடுத்து சிதைத்தார். இதனால், 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த கோவில், எருக்கஞ்செடி மற்றும் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது.  அந்த கோவிலில் பிரம்மா, சண்டிகேஸ்வரர், வருண லிங்கம், சோமாஸ்கந்தர் என, 13 கற்சிலைகள் மண்ணில் புதைந்தன. இவற்றில், நின்ற நிலையில் முருகன் கற்சிலையை, 23 ஆண்டுகளுக்கு முன், மர்ம நபர்கள் திருடிவிட்டனர். அப்போது, ஊர் மக்கள், போலீசில் புகார் அளிக்கவில்லை. சமீபத்தில், அந்த ஊரைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், சென்னை அசோக்நகரில் உள்ள, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். கூடுதல் டி.ஜி.பி., சைலேஷ்குமார் யாதவ் தலைமையிலான போலீசார், முருகன் கற்சிலை, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டதை உறுதி செய்தனர். அந்தச் சிலை, அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதை கண்டறிந்தனர். சிலையை வெளியுறவு அமைச்சகம் வாயிலாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !