பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா; செப்.10ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது
பி்ள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி நகரக் கோயிலான கற்பக விநாயகர் கோயிலில் நடைபெற உள்ள சதுர்த்திப் பெருவிழாக்கான ஏற்பாடுகள் குறித்து பரம்பரை அறங்காவலர்கள் தெரிவித்தனர்.
கோயில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி பழ.கரு.லெ.ராம.ச.தண்ணீர்மலை, காரைக்குடி முரு.வீர.சா.க.சாமிநாதன் ஆகியோர் தெரிவித்ததாவது: ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கற்பக விநாயகப் பெருமானுக்கு பத்து நாட்கள் விழா நடைபெறும். இந்த ஆண்டு செப்.10ல் காலையில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பக்தர்கள் சிறப்பாக சுவாமி தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலெக்டர்,போலீஸ் எஸ்.பி.,அறநிலையத்துறை இணை ஆணையர் அவர்கள் ஆலோசனைகளின்படி பாதுகாப்பு, போக்குவரத்து, தீயணைப்பு, சுகாதாரம்,தரிசன வரிசை,உணவு, குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில்தான் விநாயகர் சூரசம்ஹாரம் செய்யும் வைபவம் 6ம் திருநாளில் விமர்சையாக நடத்தப்படுகிறது. 9ம் திருநாளான தேரோட்டத்தில் பெண்கள் வடம் பிடிப்பர். தினசரி காலை,மாலை சுவாமி புறப்பாட்டு நடைபெறும். மாலை 5:00 மணியிலிருந்து சுவாமி திருவீதி உலா நடைபெறும் வரை தொடர்ச்சியாக தினசரி ஆன்மீக சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்திப்பாடல், கலை நிகழ்ச்சி, நாதசுர இன்னிசை,பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். ’ என்றனர்.