உத்தமபாளையம் கருப்பணசாமி கோயிலில் பாலாலயம் : ரூ.59 லட்சத்தில் திருப்பணிகள்
உத்தமபாளையம்: உத்தமபாளையம் முத்து கருப்பணசாமி கோயில் திருப்பணிகள் நடைபெறுவதை ஒட்டி இன்று காலை பாலாலயம் நடைபெற்றது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
உத்தமபாளையத்திலிருந்து உஅம்மாபட்டி செல்லும் வழியில் உள்ளது பாறையடி முத்து கருப்பணசாமி கோயில். மலைக் குன்று மீது இருந்த சிவன் கோயிலிற்கு காவல் தெய்வமாக 700 ஆண்டுகளுக்கு முன் இந்த கோயில் கட்டப்பட்டதாக வரலாறுகள் சொல்கிறது. மூலவர் முத்து கருப்பணசாமி நின்ற கோலத்தில் கையில் அரிவாளுடனும், முறுக்கிய மீசையுடனும் கம்பீரமாக காட்சி தருகிறார். சன்னதிக்கு வெளிப்பிரகாரத்தில் இரண்டு பக்கங்களிலும் காவல் தெய்வங்களாக இரண்டு பூதகணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இந்த கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வெள்ளிக்கிழமைகளில் கிடாவெட்டி காதணி விழா நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறும். சிதிலமடைந்த இந்த கோயிலை கடந்த 1997 ல் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்தனர். 25 ஆண்டுகளுக்கு பின் தற்போது திருப்பணி மற்றும் மகா கும்பாபிஷேகம் நடந்த ஹிந்து சமய அறநிலையத் துறை தற்போது முடிவு செய்தது. இது தொடர்பாக பொதுமக்களை அழைத்து கடந்த மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதன்பேரில் ரூ.59 லட்சம் செலவில் உபயதாரர்கள் பலர் திருப்பணி செய்ய முன் வந்துள்ளனர். இன்று காலை பாலாலயம் நடைபெற்றது. அதிகாலை 6 மணியிலிருந்து கருப்பண சாமிக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. திருப்பூரை சேர்ந்த அர்சகர் ராமராஜ் பாலாலயம் தொடர்பான பூஜைகளை செய்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், பிடிஆர்.விஜயராசன், உபயதாரர் போஜராசன், செயல் அலுவலர் இளஞ்செழியன், ஆய்வாளர் தியாகராசன் மற்றும் உபயதாரர்கள் பங்கேற்றனர்.