நாகசக்தி அம்மன் கோவிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா
 ஆலாந்துறை: ஆலாந்துறையில் உள்ள நாகசக்தி அம்மன் கோவிலில் உள்ள ராகு கேது ஸ்தலத்தில், ராகு கேது பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடந்தது.
ஆலாந்துறை, பெருமாள் கார்டனில் ஸ்ரீ நாக சக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 27 நட்சத்திரங்களுக்கான விருச்சங்கள் அமைந்துள்ள வனத்தில், ராகு கேது பகவான்களுக்கு தனி சன்னதி உள்ளது. மாலை, 3:40 மணிக்கு, ராகு பகவான், மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும்; கேது பகவான், துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர். இதனையொட்டி, ஸ்ரீ நாக சக்தி அம்மன் கோவிலில் உள்ள ராகு கேது சன்னதியில், நேற்று பகல், 2:30 முதல் மாலை, 6:00 மணி வரை, ராகு கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில், ஸ்ரீராம் வாத்தியார் தலைமையில், விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், ராகு கேது கலச ஆவாஹனம், கலச பரிகார வேள்வி, ருத்ராபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. ராகு கேது பகவான்கள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.