ராமேஸ்வரம் கோயிலில் மழை நீர் புகுந்தது : பக்தர்கள் அவதி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த திடீர் கனமழையால் ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் பக்தர்கள் சிரமத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதியில் திடீரென கனமழை பெய்தது. இதனால் ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன், பஸ் ஸ்டாண்ட் அருகில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது. இம்மழை 1:30 மணி நேரம் பெய்ததால் ராமேஸ்வரம் திருக்கோயில் முதல் பிரகாரம், தெற்கு 3ம் பிரகாரம் மற்றும் மைய மண்டபத்தில் மழை நீர் செல்லும் வாறுகால்கள் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் அரைஅடி உயரத்திற்கு தேங்கியது. இதனால் பக்தர்கள் சிரமத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின் மழை நின்றதும் தேங்கிய தண்ணீரை கோயில் ஊழியர்கள் மின் மோட்டார், துடைப்பம் மூலம் அரைமணி நேரத்தில் வெளியேற்றினர். மேலும் கோயில் கிழக்கு, தெற்கு ரத வீதியில் மழை நீர் தேங்கி கிடந்தது.