மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா; பெருவுடையாருக்கு 48 வகை பேரபிஷேகம்
தஞ்சாவூர், பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின், 1038வது சதய விழாவை முன்னிட்டு, மூலவர் பெருவுடையார் திருமேனிக்கு 48 வகையான மங்கள பொருட்களைக் கொண்டு பேரபிஷேகம் நடந்தது.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன், முடி சூட்டிய நாளை அவன் பிறந்த நட்சத்திரமாகிய ஐப்பசி சதய நாளன்று, ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு ராஜராஜ சோழனின் 1038 வது சதய விழா நேற்று, (24ம் தேதி), காலை மங்கல இசையுடன் துவங்கியது.தொடர்ந்து திருமுறை பாடல்கள், கருத்தரங்கம், 1038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது.
தொடர்ந்து சதய விழாவான இன்று (25ம் தேதி) ராஜராஜ சோழன் மீட்டெடுத்த பன்னிரு திருமுறை சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு,ஓதுவார்கள் பன்னிரு திருமுறை பாடல்களை பாடி ஊர்வலமாக,யானை மீது எடுத்துச் சென்றனர்.