சபரிமலையில் நாளை தங்க அங்கி அணிவித்து தீபாராதனை; அலைமோதும் பக்தர்கள்
சபரிமலை; சபரிமலையில் நாளை மாலை ஐயப்பனுக்கு தாங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறுகிறது. நாளை மறுதினம் நடைபெறும் மண்டல பூஜையுடன் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெறும்.
கடினமான விரதம், முழுமையான அர்ப்பணிப்புடன் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் நீண்டு நடைபெற்ற மண்டல காலத்தின் நிறைவு பூஜைகள் இன்றும், நாளையும் சபரிமலையில் நடைபெறுகிறது. கடந்த 23-ல் ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி பவனிநாளை மாலை சன்னிதானம் வந்தடையும். அந்த அங்கியை தந்திரி மகேஷ் மோகனரரு, மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி ஆகியோர் பெற்று ஐயப்பன் விக்கிரகத்தில் அணிவித்து தீபாராதனை நடைபெறும்.
நிறைவாக நாளை மறுதினம் காலை 10:30 முதல் 11 30 க்குள் மண்டல பூஜை நடைபெறும். இந்த நேரத்தில் ஐயப்பனுக்கு தேவசம்போர்டு சார்பில் சிறப்பு கலபாபிஷேகம் நடைபெறும் தொடர்ந்து தங்க அங்கிஅணிவித்து மண்டல பூஜை நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 9:00 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெறும்.
தங்க அங்கி நாளை வருவதையொட்டி நிலக்கல் - பம்பை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி காலை 11:00 மணி வரை வரும் வாகனங்கள் மட்டுமே நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு செல்ல அனுமதிக்கப்படும். அதன்பின்னர் வரும் வாகனங்கள் பகல் 2:00மணிக்கு பின்னர் தான் பம்பை செல்ல அனுமதிக்கப்படும். மேலும் இன்று மதியம் முதல் தங்க அங்கி சன்னிதானம் வந்து சேரும் வரை பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் செல்ல கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும்.