சிதிலமடைந்த வாஞ்சிஸ்வரர் கோவில் புனரமைப்பு பணியில் கட்டுமான அடித்தளம், ஆபரணம் கண்டெடுப்பு
மயிலாடுதுறை; முற்றிலுமாக சிதிலமடைந்த பாலையூர் வாஞ்சிஸ்வரர் கோவிலை பழமை மாறாமல் புனரமைக்க அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கோவிலின் அடித்தளம் மற்றும் ஆபரணத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாளையூர் கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான மங்களாம்பிகை சமேத வாஞ்சீஸ்வரர் கோவில் உள்ளது. காலப்போக்கில் இக்கோவில் இயற்கை இடர்பாடுகளால் முற்றிலுமாக சிதிலமடைந்தது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் இடத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாத்தனர். தொடர்ந்து கோவிலை புதுமையாக அமைக்க மயிலாடுதுறை மண்டல அளவிலான வல்லுநர் குழு, சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி செயல்படும் மாநில அளவிலான வல்லுனர் குழுவிற்கு பரிந்துரை செய்தது. அதனை ஆராய்ந்த அக்குழுவினர் அகழாய்வு செய்து கோவிலை பழமை மாறாமல் புணரமைக்க உத்தரவிட்டனர். இதனை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் ஹரி சங்கரன் மேற்பார்வையில் தொல்லியல் துறை ஆலோசகர் மதிவாணன் வழிகாட்டுதல் படி அகழாய்வு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கோவிலின் சுவாமி, அம்பாள் சன்னதிகளின் பழைய கட்டுமான அடித்தளம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அகழ்வாய்வின் போது 11 கிராம் எடையுள்ள தங்க ஆபரணமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அறிந்த இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம் கோவிலுக்கு சென்று கண்டுபிடிக்கப்பட்ட அடித்தளம் மற்றும் ஆபரணத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் அவர் அகழாய்வு பணி முழு வீச்சில் நடத்தப்பட்டு கோவிலின் முழுமையான அடித்தளம் கண்டுபிடிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுடன் கோவில் பழமை மாறாமல் புனரமைக்கப்படும் என தெரிவித்தார் இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.