குப்பைக்கு தீ : காரமடை அரங்கநாதர் கோவில் சுற்று சுவர் சேதம்
ADDED :657 days ago
மேட்டுப்பாளையம்; குப்பைக்கு தீ வைத்ததில், காரமடை அரங்கநாதர் கோவில் சுற்று சுவர் நாசமடைந்தது.
கோவை மாவட்டம் காரமடையில் புகழ் பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி சொர்க்க வாசல் வீதி உள்ளது. இங்கு கோவிலின் சுற்று சுவர் அருகே குப்பைகள் வீசப்படுகின்றன. இந்த குப்பைகள் அங்கேயே தேக்கம் அடைந்து, கோவிலுக்கு வரும் பக்தர்களை முகம் சுழிக்க வைக்கிறது. இதனிடையே நேற்று இரவு மர்ம நபர்கள், இந்த குப்பைக்கு தீ வைத்தனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததில், கோவில் சுற்று சுவர் நாசம் அடைந்தது. அருகில் உள்ளவர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் சுற்று சுவர் வழியாக கோவிலுக்கு செல்லும் தண்ணீர் குழாய் சேதமடைந்தது. காரமடை நகராட்சி சார்பில், இப்பகுதியில் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.